Tuesday 5 April 2022

திருப்பூர் மாநகராட்சி குறை கேட்பு கூட்டம்.நல்லாறு பாதுகாக்க கோரி மனு!

"திருப்பூர் நல்லாறு "மற்றும் "நஞ்சராயன்" குளத்தினை பாது காப்போம்! மீட்டெடுப்போம்!!

மனுதாரர்:
ஊர் பொது மக்கள் சார்பாக
ஆ.பழனிக்குமார்
நல்லாறு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்
க.எண்:5/419 வேலன் நகர்
வெங்கமேடு
அங்கேரிபாளையம்
திருப்பூர்- 641 603
செல்:97910 50513

பெறுநர்கள்:
01.உயர்திரு.டாக்டர்.எஸ்.வினீத். இ.ஆ.ப
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
திருப்பூர்.

02.உயர்திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப.
ஆணையாளர் அவர்கள்
திருப்பூர் மாநகராட்சி

03.மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்.
செய்தி துறை அமைச்சர்
தமிழ் நாடு

04. மாண்புமிகு.கயல் விழி செல்வராஜ் அவர்கள்
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்
தமிழ் நாடு

05.உயர்திரு.க.செல்வராஜ் அவர்கள்
திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர்

இடம்: திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி
மக்கள் குறை கேட்பு முகாம்
ஜெகா கார்டன்
அங்கேரிபாளையம்
திருப்பூர்.

நாள்:30.12.2021
நேரம்: காலை11.00 மணி.

பொருள்: திருப்பூர் நல்லாற்றில் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றிடவும், திருப்பூர் மாநகராட்சி மூலம் கழிவுநீர் கலப்பதினை தடுத்திடவும், சட்ட விரோதமாக பதிக்கப்பட்டுள்ள சாய ஆலை கழிவு நீர் குழாய்களை அப்புற படுத்திடவும், 
நல்லாற்றின் மைய பகுதியில் நீர் வழி போக்குவரத்திற்கு இடையூறாக தமிழக மின்சார வாரியம் மூலம் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள/அமை க்கப்பட்டு வரும் உயர் மின் கோபுரங்களை அகற்றிடவும்,
நல்லாறு சென்றடையும் நஞ்சராயன் குளத்தில் செயல் படாமல் இருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை செயல் படுத்திடவும், நல்லாற்றினையும் நஞ்சராயன் குளத்தினையும் தூர் வாரி பாது காக்கக்கோரி பொது நல புகார் மனு,

ஆறு ,குளம் ,குட்டை, ஏரி வாய்க்கால்   போன்ற நீர்நிலைகளை பாது காப்பது இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 51 A இன் கீழ் வழங்கி உள்ள எமது கடமையாக கொண்டு இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 19(1) அ இன் கீழ் இம் பொது நல மனு நல்லாறு பாதுகாப்பு குழு சார்பாக  தாக்கல் செய்ய படுகிறது.

நல்லாறு:
உங்களின் மேலான பார்வைக்கு;

இது  அசுத்தம் நிறைந்த துர் நாற்றம் வீசும் மனித உயிருக்கு மிகுந்த சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் கெட்ட ஆறாக காட்சி அளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் இருந்து  திருமுருகன் பூண்டி , ஆத்து பாளையம் ,அங்கேரிபாளையம், பிச்சம்பாளையம் வழியாக ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் நஞ்சராயன் குளம் வரை செல்லும் மிக குறைந்த நீளம் கொண்ட ஆறு தான் நல்லாறு ஆகும்.

மழைக்காலங்களில் மட்டுமே நல்லாற்றில் மழை நீர் வழிந்தோடும்.

பெயர் தான் நல்லாறு!

ஆனால் ஆக்கிரமிப்புகளினால் ஆங்காங்கே குறுகிய ஓடைகளாக  மாற்றப்பட்டும் கழிவுகளாலும் கழிவு நீர்களினாலும் பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் மற்றொரு திருப்பூர் கூவமாக கெட்ட ஆறாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது.

கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லாற்றில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கால் அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட  பலர் வீடுகளை இழந்து  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் மடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் தெரிய வருகிறது.

அவிநாசி முதல் திருமுருகன் பூண்டி வரையிலும் நல்லாறு வறண்டும் ஆக்கிரமிப்புகளால் குறுகியும் நீர் வழிப்பாதை ஆங்காங்கே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும் சிறிய அளவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

ஆனால் திருமுருகன் பூண்டியில் இருந்து நஞ்சராயன் குளம் வரையில் தான் அனைத்து பகுதிகளில் இருந்தும் சாக்கடை கழிவு நீர் நல்லாற்றிற்குள் நேரடியாக கலக்கப்படுகிறது.

நல்லாறு முழுவதும் சாக்கடை கழிவு நீர்களும், சாய சலவை ஆலை கழிவு நீர்களும் கழிவுகளும் கொட்டப்பட்டிருப்பதினை காண முடிகிறது.

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி என தமிழக அரசால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நல்லாற்றில் கழிவு நீரினை விட்டு மாசுபடுத்தி வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எங்கும் துர்நாற்றமும் ஆற்று ஓரம் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருவதினை நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் கள ஆய்வில் நேரில் காண நேரிட்டது.

இது நமக்கு மிகுந்த அதிர்ச்சியினையும் சொல்லொணா துயரத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் பல சாய ஆலை தொழிற்சாலைகள் நல்லாற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

அந்த தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளையும் குப்பைகளையும் நேரடியாக ஆற்றில் தொடர்ந்து கொட்டி மாசு படுத்தி வருகிறார்கள்.

அவிநாசியில் இருந்து நஞ்சராயன் குளம் வரையில் ஆற்றின் இருபுறமும் அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பார பட்சம் பார்க்காமல் திருப்பூர் மாவட்ட பொதுப்பணிதுறை -நீர்வள ஆதாரத்துறையினர் அகற்ற வேண்டும் எனக்கோருகிறோம்.

நொய்யலாற்றில் திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் கலந்ததின் விளைவாக சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாய் போய் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழில் மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி தரும் திருப்பூர் என மார்தட்டி பெருமையாக சொல்லி கொண்டிருக்கலாம்.

பின்னலாடை தொழில் அதிபர்கள் மாட மாளிகைகளுடன் உல்லாசமாய் வாழ்கின்றனர்.இவர்களுக்கு எதனை பற்றியும் கவலை இல்லை.

அரசு வழங்கிய ₹200 கோடி செலவில் சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்த பிறகும் நல்லாறு மற்றும் நொய்யலாற்றில் சாயக்கழிவு நீர் எவ்வாறு கலக்கப்படுகிறது என்பது வருத்தம் அளிக்கிறது.

நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் கோரிக்கைகள் :

1.ஆடு ,மாடு ,கோழி ,பன்றி ,மீன் ,முட்டை போன்ற மாமிச கழிவுகளையும் குப்பைகளையும் கட்டிட கழிவுகளையும் வியாபாரிகளும் பொது மக்களும்  நல்லாற்றில் கொட்டுவதினை தவிர்க்கவும்/ தடுக்கவும் வேண்டுகிறோம்.

2.சாய ஆலை, பிளீச்சிங் ஆலை பிரிண்டிங் ஆலை ,போன்ற பின்னலாடை தொழில் சார்ந்த நிறுவனங்கள் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக நல்லாற்றில் கலப்பதினை தவிர்க்கவும்/ தடுக்கவும்  வேண்டுகிறோம்.

3.சாய ஆலைகளில் சேகரமாகும் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து நல்லாற்றிலும் அதன் கரைகளிலும் கொட்டுவதினை தவிர்க்கவும்/ தடுக்கவும் வேண்டுகிறோம்.

4.தனியார் செப்டிக் டேங் (Sevege) கிளீனிங் லாரிகள் கழிவுகளையும் கழிவு நீரினையும் நல்லாற்றில் விட்டு  மாசு படுத்துவதை தவிர்க்கவும் /தடுக்கவும் வேண்டுகிறோம்.

5.மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் வாகனங்களிலும் குப்பை அள்ளும் வாகனங்களிலும் சேகரிக்கப்படும் கழிவுகளை நல்லாற்றில் கொட்டுவதினை தவிர்க்கவும் /தடுக்கவும் வேண்டுகிறோம்.

6.வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 
இருந்து பொது கழிவு நீர்க்கால்வாய்கள் மூலம் வெளியேறும் கழிவு நீரினை நேரடியாக  நல்லாற்றில் கொண்டு சென்று நல்லாற்றினை மாசு படுத்தி வருவதினை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தவிர்க்கவும் /தடுக்கவும் வேண்டுகிறோம்.

உடனடியாக மாநகராட்சி பொது கழிவு நீர் கலப்பதினை தடுத்தால் மட்டுமே நல்லாற்றினை பாதுகாக்க முடியும்.

7.திறந்த நிலை கழிவு நீர் கால்வாய் கழிவு நீரினையும் மாற்று ஏற்பாடுகள் செய்து பாதாள சாக்கடை மூலம் பொது  சுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று  சுத்திகரிப்பு செய்ய மாநகராட்சி நிர்வாகம் அவசர /அவசிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் .

8.நல்லாற்றின் இருகரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும்  உடனடியாக அப்புற படுத்த கோருகிறோம்.

9.சாய ஆலை கழிவு நீரினை நேரடியாக சட்ட விரோதமாக நல்லாற்றில்  கலக்கும் ஆலைகளின் உரிமத்தினை ரத்து செய்வதுடன் அதற்கு காரணமானவர்கள் மீது  இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு /IPC 431 இன் கீழ்  குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர  கோருகிறோம்.

10.கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள்  டயர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுபவர்கள் மீதும் அதனை தீயிட்டு எரித்து மாசு மற்றும் பொது சுகாதார கேடு ஏற்படுத்துப வர்கள் மீதும் அபராதம் விதிப்பதுடன் குற்ற வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்று தர கோருகிறோம்.

11.நல்லாற்றின் கரையோரம்  மாநகராட்சி மூலம் நிரந்தர எச்சரிக்கை பலகைகள் வைக்க கோருகிறோம்.

12.மாவட்ட நிர்வாகம் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி நல்லாற்றை தூர்வாரி சுத்தப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய கோருகிறோம்.

13. நல்லாறு கலக்கும் நஞ்சராயன் குளத்தில் செயல் படாமல் இருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை செயல் படுத்தி கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்து நஞ்சராயன் குளத்தில் விடக்கோருகிறோம்.

14  நல்லாற்றின் குறுக்கிலும் இரு புறமும் தாறுமாறாக ஆற்றிற்குள் நீர் வழி பாதைக்கு இடையூறாக  பதிக்கப்பட்டுள்ள சாய ஆலை சுத்திகரிப்பு நிலையம் செல்லும் குழாய்களை உடனடியாக அப்புற படுத்தி ஆற்றின் மேற்பகுதியில் வெளியில் தெரியும் வகையில் உயரமாக மாற்றி அமைக்க கோருகிறோம்.

15. ஆற்றிற்குள் செல்லும் சாயக்கழிவு நீர் குழாய்களை பராமரிப்பு பணி என்ற பெயரில் சாய ஆலை உரிமையாளர்களினால் அவ்வபோது ஆற்றிற்குள் சாயக்கழிவு நீர் திட்டமிட்டு  கலப்பதினை தவிர்க்க/ தடுக்க கோருகிறோம்.

16.வர்த்தக நிறுவனங்கள் வியாபாரிகளின் மாமிச கழிவுகள் நல்லாற்றில் கொட்ட படுவதை தவிர்க்க/ தடுக்க மாநகராட்சியின் பாதுகாக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மாமிச கழிவுகளை தினமும் சேகரிக்க வேண்டுகிறோம்.

17.அங்கேரிபாளையம் பகுதியில் நல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் உடைக்கப்பட்ட ஒரு பகுதி தடுப்பு சுவரினை கட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அனைத்து தடுப்பணைகளையும் பராமரிக்க   வேண்டுகிறோம்.

18.நல்லாற்றின் இருபுறமும் கரையை பலபடுத்த வேண்டுகிறோம்.

19.திருமுருகன் பூண்டியில் இருந்து அங்கேரிபாளையம் வரை நல்லாற்றின் கரையினை இணைக்கும் சாலையை செப்பனிட வேண்டுகிறோம்.

20.நல்லாற்றின் கரையோரம் பல ஆண்டுகளாக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் சொல்லொணா துயரத்துடன் வசித்து வரும் ஏழை எளிய வீடற்ற மக்களுக்கு நிரந்தரமாக வசிக்க மாற்று இடம் அல்லது வீடு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி வகை செய்ய கோருகிறோம்.

21. திருப்பூர் அங்கேரி பாளையம் வெங்கமேடு சாலையில் ஜெகா கார்டன் அருகில் உள்ள நல்லாற்று பாலத்தை கடந்து செல்லும் பாத சாரிகளுக்கும்  வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் இரண்டாயிரத்து நானூற்று பதினெட்டு மாணவ மாணவிகளுக்கும் ஆபத்து மற்றும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதி நவீன தொழிற் நுட்பத்துடன் பாலத்தின் மீது நடை பாதை அமைத்து தர கோருகிறோம்.
 
22. நல்லாறு பாதுகாப்பு சம்பந்தமாக மேற்படி புகார் மனு நல்லாறு‌ பாதுகாப்பு குழு மூலம் 28.08.2019 அன்று திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அங்கேரிபாளையம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமில் மனு எண் 97 ஆக வழங்க பட்டும் இது நாள் வரையிலும் நல்லாற்றிலும்  நஞ்சராயன் குளத்திலும் எந்த ஒரு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க பட வில்லை என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

நஞ்சராயன் குளம்:
தங்களின் மேலான பார்வைக்கு;

இதனை நஞ்சு கலந்து வரும் குளம் என அழைப்பதே நல்லது.

தமிழ்நாடு அரசு -பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் (முறைசாரா குளமாக ) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் : திருப்பூர்

வட்டம் : ஊத்துக்குளி

ஒன்றியம் : ஊத்துக்குளி

கிராமம் : சர்க்கார் பெரியபாளையம்.

நீர் நிரப்பு பரப்பு : 96 சதுர மைல்கள்

நீர் நிரப்பு பகுதி :10.6 மில்லியன் சதுர அடி (அ) 243.34 ஏக்கர்

கொள்ளளவு : 89.34 மில்லியன் கன அடி (அ) 2.5289 மில்லியன் கன அடி

மிகு வெள்ள நீர் அளவு : 5422 கன அடி/விநாடி (அ) 153.48 கன மீட்டர் /விநாடி

குளத்தின் முழு நீர்மட்டம் : 37.50 அடி (அ)
11.43 மீட்டர்

குளத்தின் மிகு நீர்மட்டம் : 39.50 அடி (அ)12.4 மீட்டர்

கரையின் மேல்மட்ட அளவு : 45.50 அடி (அ) 13.87 மீட்டர்

மதகுகளின் எண்ணிக்கை : 02

மதகின் கிடை மட்ட அளவு 01: 17.32 அடி(அ) 5.28 மீட்டர்

மதகின் கிடை மட்ட அளவு : 02: 30.21 அடி(அ) 9.20 மீட்டர்

நீரின் ஆழம் : 20.18 அடி (அ)6.15 மீட்டர்

கரையின் நீளம் : 2297 அடி (அ)700.13 மீட்டர்

கலிங்கின் நீளம் : இடது 367 அடி (அ) 111.86 மீட்டர்

கலிங்கின் நீளம் : வலது 250 அடி (அ)78.94 மீட்டர்

ஆயக்கட்டு : 108 ஏக்கர்

பொதுசுத்திகரிப்பு நிலையம் :
உங்களின் மேலான பார்வைக்கு;

நஞ்சராயன் குளத்தினை புனரமைப்பு செய்து சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்கி நிதியில் (Environment Protection Renewable Energy Devlopment Fund ) இருந்து ₹400 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்: சித்ரா ஹெம் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி 
109, அம்மன் சந்நதி வீதி,
செங்கோட்டை - 627 809.

மேற்காண் ஒப்பந்ததாரர் மூலம் ஆறு மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள்,மாதம் ஆண்டு எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

நல்லாறு பாதுகாப்பு குழுவினர் நேரடி கள ஆய்வில் கண்ட அதிர்ச்சி தகவல்!!

மாசடைந்து வரும் நல்லாற்று கழிவு  நீர் நேரடியாக நஞ்சராயன் குளத்தில் கலக்காமல் இருப்பதற்காக தடுப்பணை கட்டி  குளத்தினை புனரமைத்து சுத்திகரிப்பு நிலையம் கட்டி நீரினை சுத்திகரிப்பு செய்து நஞ்சராயன் குளத்தில் விடுவதற்காக சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி நிதியில் இருந்து ₹400 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

நல்லாறு நீரினை தேக்கி அங்கிருந்து சிறிய கால்வாய் மூலமாக சுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்து மீண்டும் நஞ்சராயன் குளத்தில் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு சுத்திகரிக்கப் படாமல் குளத்திற்கு  வெளிப்புறம் வழியாக கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் நொய்யல் ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது.

நீர் தேக்கத்தில் மதகுகள் அடைக்கப்பட்டிருந்தாலும் நீர் நிறைம்பி வழிந்து நேரடியாக குளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

நீர் தேக்கம் ழுழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து சாய ஆலை மற்றும் கழிவு நீரின் துர்நாற்றம் வீசுகிறது.

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும்  செயல் படாமல்  பூட்டப்பட்டுள்ளது.

243 ஏக்கர் நில பரப்பளவில் நஞ்சராயன் குளம்  கண்கொள்ளா காட்சி அளிக்கிறது.

குளம் முழுவதும் கருவேல மரங்கள் புதர் போல் மண்டி வளர்ந்துள்ளது.

அங்கும் சாய ஆலை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை பறவைகளையும் காண முடிகிறது.

மீன்களை பிடிப்பதோ பறவைகளை வேட்டையாடுவதோ சட்டப்படி குற்றம் என பொது பணித்துறையால் வைக்கப்பட்ட தகவல் பலகை புதருக்குள் மறைந்துள்ளது.

ஆனால் பலர் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக  தூண்டிலிலும் வலை விரித்தும் கழிவு நீரில் உயிர் வாழும் மீன்களை பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.கழிவு நீரினை கால்நடைகள் குடிப்பதினையும் காண நேரிட்டது. கழிவுநீர் அருந்தும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

குளத்தின் விபரங்கள் அடங்கிய தகவல் 
பலகை உடைந்து தலை கீழாய் தரையில் தொங்கி கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையினரின் அலட்சிய போக்கினால் சுத்திகரிப்பு நிலையம் செயல் படாமல் கழிவு நீர் குளத்திற்குள் நேரடியாக செல்கிறது.

₹400 இலட்சம் ரூபாய் அரசு  பணம்  வீணடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி  ஸ்மார்ட் சிட்டி/ மிடுக்கான நகரம் திட்டம் செயல் படுத்த பட்டு வரும் நிலையில்

பொதுப்பணி துறை, 
மாசு கட்டுப்பாட்டு வாரியம்
மாநகராட்சி சுகாதாரத்துறை
வருவாய் துறை
காவல்துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் குழு அமைத்து மேற்படி நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் கோரிக்கைகளை ஆய்வு செய்து நல்லாற்று நீர் மாசடையாமல் பாது காத்திடவும், நீலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நஞ்சராயன் குளம் முழுவதும் நிறைந்து உபரி நீர் விவசாயத்திற்கும் பயன்படும் வகையிலும் நமது எதிர்கால சந்ததியினர் பயன் பெறும் வகையில் நல்லாற்றிலும்  நஞ்சராயன் குளத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி மீட்டெடுத்து  தூர்வாரி சுத்த படுத்தி பாதுகாத்திடவும், நீர் நிலை  ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழி காட்டுதல் படி ஆவண செய்ய கோருகிறோம்.

மேற்படி மனுவின் நகல்  பொது நலன் கருதி உரிய நடவடிக்கைக்காக பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.

01.மாண்பு மிகு பொது பதிவாளர் அவர்கள்
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்.

02.மாண்புமிகு.மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி அவர்கள்
மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்
திருப்பூர்.

இடம்: திருப்பூர்
நாள்:30.12.2021 
     
ஒப்பம்


ஆ.பழனிக்குமார்

No comments:

Post a Comment